திருப்பதி: திருப்பதி திருமலையில் 2 முறை பிரம்மோற்சவ விழா நாடைபெறுவதை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு பிரம்மோத்சவம் திருவிழா முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக செப்.17ம் தேதி முதல் 30ம் தேதிவரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த வருடம் திருப்பதி, திருமலையில் இரண்டு முறை பிரம்மோத்சவம் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வாயிலாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு முதலில் வரும் திருவிழாவிற்காக வரும் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in, டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.