திருமலை: திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து திருப்பதிக்கு வரும் 1வது மலைப்பாதை 7வது மைல் அருகே மலைப்பாதையில் நேற்று முன்தினம் இரவு 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது. இந்த யானைகள் அங்கிருந்த மரக்கிளைகளை உடைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இதனைகண்டு அவ்வழியாக சென்ற பக்தர்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து தேவஸ்தான வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வாகனங்களின் சைரனை ஒலிக்கச்செய்தனர். சத்தம் கேட்ட யானைகள் பிளறியபடியே சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனையடுத்து வனத்துறையினர், பக்தர்கள் தங்களது வாகனங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வலியுறுத்தினர்.