அமராவதி: திருப்பதி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பூத்தலப்பட்டு – நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாகாலா மண்டலம் தோட்டப்பள்ளி என்ற இடத்தில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.
கன்டெய்னர் லாரிக்கு அடியில் கார் சிக்கி கொண்ட நிலையில், காரில் பயணம் செய்த 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அங்கு இருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட 2 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.