Tuesday, September 26, 2023
Home » நீதிமன்ற உத்தரவை உரிய காலத்தில் நிறைவேற்றாத திருமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு ரூ.1000 அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவை உரிய காலத்தில் நிறைவேற்றாத திருமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு ரூ.1000 அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

by Arun Kumar

சென்னை: சென்னை, மேற்கு அண்ணா நகரை சேர்ந்த எஸ்.இளவேனில் என்பவர் தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புடைய ராயல் என்பீல்ட் புல்லட்டை காணவில்லை என கடந்த 2021 ஆகஸ்ட் 15ம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யவும், வாகனம் கிடைக்காவிட்டால் ‘‘வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை” என சான்றிதழ் வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், வாகனத்தை திருடியவர்களை கைது செய்ய வேண்டும், காப்பீடு தொகைக்கு விண்ணப்பிப்பதற்காக ‘‘வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை” என சான்றிதழ் வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, அதற்கு 4 வார கால அவகாசம் வழங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என திருமங்கலம் காவல் ஆய்வாளர் வேல்முருகனுக்கு எதிராக இளவேனில் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இளவேனில் தரப்பில் வழக்கறிஞர் ஜெ.திலீபன் எம்.கோபி ஆஜராகி, வாகனத்தை கண்டுபிடிக்கவோ அல்லது சான்றிதழ் வழங்கவோ ஒரு மாத கால அவகாசம் வழங்கிய நிலையில், பலமுறை கேட்டு அதை வழங்க முன்வரவில்லை என்பதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் ஆய்வாளர் தரப்பில் அரசு வழக்கறிஞர் ல்யோனார்ட் அருள் ஜோசப் செல்வம் ஆஜராகி நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் இல்லை, உதவி ஆய்வாளர் விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை இறுதி தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கில் தொடர்பில்லாத ஆய்வாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி ஜி.சந்திரசேகரன் பிறப்பித்த உத்தரவில், 2022 மே மாதமே இறுதி அறிக்கை தயாரான நிலையில், அக்டோபர் மாதம் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, உதவி ஆய்வாளருக்கு மேலே உள்ள ஆய்வாளர் தான் நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றப்பட்டதா என கண்காணிக்க வேண்டிய தகுதியான அதிகாரி என்பதால், ஆய்வாளர் தன் கடமையை செய்ய தவறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் நீதிமன்ற உத்தரவை உரிய காலத்தில் நிறைவேற்றாத ஆய்வாளர் வேல்முருகனுக்கு ரூ.1000 அபராதம் விதித்து, அந்த தொகையை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?