நெல்லை: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நெல்லை வழியாக சென்னை – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 7ம் தேதி நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக நெல்லை வழியாக சென்னை – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் – செங்கோட்டை சிறப்பு ரயில் (06089) சென்னையில் இருந்து ஜூலை 6ம் தேதி இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு நெல்லை வந்து சேரும். பின்னர் அங்கிருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06090) செங்கோட்டையிலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு நெல்லை வந்து சேரும். பின்னர் அங்கிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, 18 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு இன்று (ஜூலை 4) காலை 8 மணிக்கு துவங்குகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.