திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள தெய்வானை என்ற யானையின் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் கடந்த 18ம் தேதி யானையின் அருகில் இருந்தனர். அப்போது யானை திடீரென திமிறி அருகில் இருந்த பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசி தாக்கியுள்ளது. இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாகன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


