நெல்லை: திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை ஒட்டி சென்னையிலிருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர். இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து முருகப் பெருமானை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி கடந்த 13ஆம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திருச்செந்தூர் கந்தஷ்டி திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்புக்கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்படுகிறது. நாளை சூரசம்ஹாரம் நடக்கும் நிலையில், இன்று இரவு 11.55 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து தாம்பரத்திற்கு நாளை இரவு 10.10 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.