வாஷிங்டன்: சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலியை நிர்வகித்து வருகிறது. இது உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். அனைத்து தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடை விதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்து, இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என தெரிவித்தது. அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை 3வது முறையாக மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.