சென்னை : ஒரே டிக்கெட் முறையை கொண்டு வரும் திட்டம் தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் கடிதம் எழுதியுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் பொதுப் போக்குவரத்து அத்தியாவசியமானதாகும். இங்கு மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் மாநகரப் பேருந்து, மெட்ரோரயில், மின்சார ரயில் என மூன்றுக்கும் தனித்தனியே பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டியுள்ளது.இதனால் நேர விரயமும், அலைச்சலும், பயணத்தில் சிரமமும் ஏற்படுவதை தவிர்க்க, ஒருங்கிணைந்த போக்குவரத்தை தமிழக அரசு ஏற்படுத்த உள்ளது. ஓரே டிக்கெட் பெற்று, பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என 3 விதமான போக்குவரத்திலும் பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.
இதற்கான டெண்டர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரே டிக்கெட் முறையை கொண்டு வரும் திட்டம் தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில் “புறநகர் ரயில்களில் டிக்கெட் எடுத்த ஒரு மணி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற விதியை திருத்தம் செய்ய வேண்டும். டிக்கெட் எடுத்த 6 மணி நேரம் அல்லது 12 மணி நேரத்திற்குள் பயணம் செய்யலாம் என விதியை மாற்றம் செய்ய வேண்டும். ஒரே டிக்கெட் முறையை அமல்படுத்த வேண்டும்,” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் கோரிக்கைக்கு தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்த பிறகு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.