டெல்லி : தக் லைஃப் படம் விவகாரத்தில் திரையரங்குகளுக்கு தீ வைக்கப்படும் என அஞ்சினால் தீயணைக்கும் கருவி வைத்துக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.கே.மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் தக் லைஃப். இந்த படத்திற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், கன்னடம் – தமிழ் உறவுக் குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கன்னட அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்த நிலையில், கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை.
மேலும் தக் லைஃப் படத்தை வெளியிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தக் லைஃப் படத்தை திரையிடும்போது பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.கே.மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,”கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியிட வெளிப்படையான அச்சுறுத்தல்கள் உள்ளன. திரையரங்குகளுக்கு தீ வைக்கப்படும் என்று மிரட்டுகின்றனர்” இவ்வாறு வாதிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “திரையரங்குகளுக்கு தீ வைக்கப்படும் என அஞ்சினால் தீயணைக்கும் கருவி வைத்துக் கொள்ளுங்கள். திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறோம். உயர்நீதிமன்றத்தை அணுகுங்கள், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.