Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை; வேதாந்தா நிறுவன மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான தாமிர உருக்கும் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதால் 2018 மே மாதம் முதல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் குற்றம் சாட்டி ஆலையை மூட உத்தரவிட்டது.

இதற்கு எதிராக ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. எனினும், தமிழ்நாடு அரசின் முடிவை 2018ல் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2020ல் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள தாமிர உருக்கும் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் (இப்போது ஓய்வு பெற்றவர்), நீதிபதிகள் ஜே பி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்து அக்டோபர் 22ல் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,’திறந்த நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை பட்டியலிடுவதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. மறுஆய்வு மனுக்களை ஆய்வு செய்ததில், தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை. மறுஆய்வுக்கான காரணம் எதுவும் நிறுவப்படவில்லை. எனவே, மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.