புதுடெல்லி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பான வழக்கை தகுதியின் அடிப்படையில் விசாரிக்க ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் சிபிஐ-யின் விசாரணை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரிக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். மேலும் விசாரணை குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு அதிகாரிகள் எஸ்.சந்திரன், சலேஷ் குமார் உட்பட சிலர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அதிகாரிகளின் சொத்து விவரங்களை தமிழ்நாடு மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த பிறப்பித்த உத்தரவிற்கு நாங்கள் பிறப்பித்த இடைக்கால தடை தொடரும். அதேநேரத்தில் இந்த வழக்கினை தகுதியின் அடிப்படையில் விரைந்து பட்டியலிடடு உயர்நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை முடித்து வைத்தனர்.