Saturday, July 12, 2025
Home செய்திகள் தூத்துக்குடி அருகே பரபரப்பு ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: ஹெச்எம் உள்பட 4 பேர் அதிரடி சஸ்பெண்ட்

தூத்துக்குடி அருகே பரபரப்பு ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: ஹெச்எம் உள்பட 4 பேர் அதிரடி சஸ்பெண்ட்

by MuthuKumar

உடன்குடி: பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளி ஹெச்எம் உள்பட 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே பரமன்குறிச்சி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். பழங்குடியின காட்டுநாயக்கன் சமுதாயத்தை சேர்ந்த இவர், பன்றி மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி திருமணி. இவர்களது மகன் முத்துகிருஷ்ணன்(15), பரமன்குறிச்சியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது கொல்லைப்புறத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் சட்டைப்பையில் இருந்து கடிதம் ஒன்று சிக்கியது.

அதில், ‘‘என் சாவுக்கு காரணம் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பியூலா, மேரி மற்றும் தலைமை ஆசிரியர் தான்’’ என எழுதி கீழே முத்துகிருஷ்ணன் என்றும் கைப்பட எழுதி குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது முத்துகிருஷ்ணனுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதாகவும், பள்ளி ஆசிரியர்களும் மாணவனை பன்றி மேய்க்கத் தான் நீ லாயக்கு என கூறியதாகவும் தகவல்கள் பரவியது. இதுகுறித்து போலீசார் பள்ளியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே மாவட்ட கல்வி அதிகாரி கண்ணன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள், பரமன்குறிச்சி பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். அப்போது மாணவனை தரக்குறைவாகவும், மன உளைச்சலுக்குள்ளாகும் படியும் ஆசிரியர்கள் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளி மேலாளர் பிரபாகர், கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் வளர்மதி, பியூலா, மேரி, தலைமை ஆசிரியை சத்யா ஆகிய நால்வரையும் சஸ்பெண்ட் செய்ததற்கான நகலை வழங்கினார். மாணவன் முத்துகிருஷ்ணன் மறைவுக்கு நேற்று பள்ளியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நேற்று மதியம் (24ம் தேதி), இன்று (25ம் தேதி) பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
மாணவரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். மாணவரின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். அவர்களுடன் கோட்டாட்சியர் சுகுமாறன் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்து அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த அவர்கள், மாணவரின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi