பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சிறு வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு நேற்று மாலை தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் நடமாடும் சிறுகடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்று வியாபாரிகளுக்கு வழங்கினார்.
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகளுக்கு நேற்று மாலை தமிழ்நாடு அரசின் ரூ.1 கோடி மதிப்பில் நடமாடும் கடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகரமன்றத் தலைவர் என்இகே.மூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சா.மு.நாசர் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 50 பயனாளிகளுக்கு நடமாடும் சிறுகடைகளை வழங்கினார். இதில், ஒரு கடையின் மதிப்பு தலா ரூ.2 லட்சம் என 50 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நடமாடும் சிறுகடைகள் வழங்கப்பட்டு உள்ளன. பின்னர் பயனாளிகளை நேரில் சந்தித்து, அந்த கடையில் என்ன வியாபாரம் செய்யப் போகிறீர்கள் என சா.மு.நாசர் எம்எல்ஏ கேட்டறிந்தார்.
இதில் சிற்றுண்டி, நொறுக்குத்தீனி, டீக்கடை என சிறு வியாபாரங்களில் ஈடுபடப் போவதாக பயனாளிகள் தெரிவித்தனர். இதில் நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், திமுக நிர்வாகிகள் ஏ.ஜே.பவுல், இளங்கோவன், உமாபதி, சங்கர், பரிசமுத்து, பிரதானம், இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.