சென்னை:தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 2025 பிப்ரவரி 20ம் தேதி முதல், 2026 பிப்ரவரி 19ம் தேதி வரையிலான 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு, காலை உணவு வழங்கும் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் திட்டத்தின் 4ம் நாளான நேற்று துறைமுகம் கிழக்கு பகுதி, மண்டலம்-5, வார்டு-60, மண்ணடி, செம்பு தாஸ் தெரு சந்திப்பு, மூக்கர் நல்லமுத்து தெரு மற்றும் அன்னை சத்யா நகர் பகுதியில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.
அப்போது அவர் அளித்த பேட்டி: முதலில் மயிலாப்பூரில் தொடங்கப்பட்ட மகா சிவராத்திரி விழா இந்தாண்டு 9 கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 18.02.2023 அன்று திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், கோவை பட்டீஸ்வரசுவாமி கோயில் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்,
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆகிய 5 திருக்கோயில்களிலும், அடுத்த ஆண்டு கூடுதலாக திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என 7 கோயில்களில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்தாண்டு 7 கோயில்களுடன் சேர்த்து கூடுதலாக திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரசுவாமி கோயில் என மொத்தம் 9 கோயில்களில் மகா சிவராத்திரி விழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.