*ரூ1.5 கோடி மதிப்பிலான சாலை பணி நிறைவு
திருவாரூர் : திருவாரூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விளமல் பாலம் அருகே ரூ1,5கோடியில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றுள்ள நிலையில் தற்போது உயர்மட்ட மின்கோபுர விளக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விளமல் பகுதியினை 4 சக்கர வாகனம், 2 சக்கர வாகனம், அரசு பேருந்துகள் மற்றும் அரசு வாகனங்கள் உட்பட நாள் ஒன்றுக்கு ஓருலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் இந்த விளமல் பாலம் அருகே அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதை கணக்கில் கொண்டு விபத்துகளை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார் காலை முதல் இரவு வரையில் அந்த இடத்தில் பணியில் ஈடுப்பட்டு வருவதுடன் சிக்னல் விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது இருந்து வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலையின் அகலம் போதுமானதாக இல்லாமல் இருந்து வருவதால் இந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.
இந்நிலையில் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் இந்த விளமல் பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு சாலை அகலப்படுத்துவதற்கு ரூ.1.5கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்காக பணிகள் என்பது துவங்கி நடைபெற்றது. அதன்படி விளமல் பாலத்தின் இடதுபுறம் மற்றும் வலதுபுறம் என இரு புறங்களிலும் சாலை அகலப்படுத்துவதற்காக ஓடம் போக்கி ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்ற நிலையில் எதிர் திசையிலும் பணி நடைபெற்று முடிவுற்றுள்ளது.
மேலும் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் ஏற்கனவே இந்த இடத்தில் உயர்மட்ட மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டு நகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த சாலை அகலப்படுத்தும் பணிக்காக இடமாற்றி வைக்கப்பட்டது.