*பயணிகள் எதிர்பார்ப்பு
மானாமதுரை : திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை விருதுநகர் வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூரில் இருந்து தினமும் காலை 6:25 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06197) மாங்குடி, திருநெல்லிக்காவல், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, கண்டமனூர் வழியாக காலை 9:35 மணிக்கு காரைக்குடி வந்து சேருகிறது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் காரைக்குடியில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9:20 மணிக்கு திருவாரூர் சென்றடைகிறது.
காலை 9.35 மணிக்கு வரும் ரயில் நடைமேடையில் மாலை 6 மணி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த ரயிலில் திருவாரூரில் இருந்து வரும் பயணிகள் சிவகங்கை, மானாமதுரை, விருதுநகர் செல்வதற்கு காரைக்குடி ரயில்வே நிலையத்தில் இருந்து ஆட்டோ, டாக்சி பிடித்து புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து மதுரை வழியாக பஸ்களில் தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர். இந்த ரயிலை விருதுநகர் வரை இயக்கினால் சிவகங்கை, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ரயில் பயணிகள் சங்க நிர்வாகி கங்காதரன் கூறுகையில், திருவாரூரில் காலை 6:25 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9:35 மணிக்கு காரைக்குடி வந்து அங்கிருந்து மதியம் 12 மணிக்குள் விருதுநகர் வந்து, மறு மார்க்கத்தில் மதியம் 3 மணிக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு காரைக்குடி சென்று, பிறகு இரவு 9:20 மணிக்கு திருவாரூர் சென்றடையும் வகையில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து டெல்டா மாவட்ட, தென் மாவட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும் என்றார்.
திருச்சி, மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் பகல் 12 மணி முதல் 3 மணி வரை காரிடார் பிளாக் என்ற விதியை காரணமாக வைத்து மதியம் 1 மணிக்கு மானாமதுரை சென்ற மன்னார்குடி- மானாமதுரை டெமு ரயிலை நிறுத்தினர். தற்போது திருவாரூரில் இருந்து காரைக்குடி வரும் இந்த ரயிலை 9.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து இயக்கினால் காரிடார் பிளாக் எனும் நிர்வாக விதிகளுக்கு எதிராக இருக்காது என்பதால் இந்த ரயிலை விருதுநகர் வரை நீட்டிக்கலாம் என்றார்.