திருவனந்தபுரம்: விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று திருவனந்தபுரம் வந்தார். திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டு உள்ளது. தற்போது இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றுவருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா நாளை நடைபெறுகிறது. துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக பிரதமர் மோடி இன்று திருவனந்தபுரம் வந்தார்.
இன்று இரவு திருவனந்தபுரம் கவர்னர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை 11 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்தசோனாவால் தலைமை தாங்குகிறார். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் விழாவில்கலந்து கொள்கின்றனர். இந்த விழாவை முன்னிட்டு, எம்எஸ்சி நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பலான செலஸ்டீனோ மரெஸ்கா விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு இன்று வருகிறது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விழிஞ்ஞத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் இன்றும் நாளையும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.