திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. திருவள்ளூரில், பிரசித்திப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் அமாவாசை தினத்தன்று பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவது உண்டு. அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து வழிபடுவது வழக்கம்.
இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதாலும், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதாலும் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திர, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோயில் அருகில் நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
நோய்கள் தீர்க்கவும், தடைபட்ட திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வீரராகவப் பெருமாளை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதே நேரத்தில் உறவினர்கள் இறந்திருந்தால், இந்த கோயிலில் இரவு தங்கினால் புண்ணியம் கிடைக்கும் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் இரவு நேரங்களில் கோயில் அருகே தங்கியும், ஸ்ரீ வைத்திய வீரராகவரை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.