திருவள்ளூர்: சந்தியாவதனம் எனும் பூஜை செய்ய வந்தபோது திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 வேதபாடசாலை மாணவர்கள் இறந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, சித்திரை மாத உற்சவம் கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் சென்னை சேலையூரில் உள்ள வேதபாடசாலையில் இருந்து பாராயணம் படிப்பதற்காக 5 மாணவர்கள் வந்தனர். இவர்களில் 4 பேர், சந்தியாவதனம் எனும் பூஜை செய்ய வீரராகவர் கோயில் குளத்தில் இன்று காலை 6 மணியளவில் இறங்கினர். அப்போது ஒரு மாணவன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். இதை பார்த்ததும் 3 பேரும் அலறி துடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த 2 மாணவர்கள் செய்வதறியாது திகைத்தனர். வேறு வழியின்றி 2 மாணவர்கள் நீந்தி சென்று காப்பாற்ற முயன்றனர்.
அவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் காப்பாற்ற முடியவில்ைல. இருவரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்ததும் பயந்து போன 4வது மாணவன் படிக்கட்டுக்கு நீந்தி வந்து சத்தம் போட்டான். இதை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் கோயிலுக்கு வந்தவர்கள் ஓடி வந்து, தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட உதவி தீயணைப்புத்துறை அலுவலர் வில்சன் ராஜ்குமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் நேவீஸ், சதீஷ், பிரகாஷ், பரத் உள்பட 10 பேர், தண்ணீரில் குதித்து 3 பேரையும் சடலமாக மீட்டனர். தகவலின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசாரும் விரைந்தனர்.
3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், இறந்தவர்கள் குன்றத்தூரை சேர்ந்த மணிவண்ணன் மகன் ஹரிஹரன் (17), அம்பத்தூரை சேர்ந்த சுதர்சன் மகன் வெங்கட்ரமணன் (19), தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வீரராகவன் (24) என தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்;
பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள், கோயில் குளத்தில் இறங்கி நீராடுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குளத்தில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. மேலும் கோயில் குளத்தில் உள்ள நீரை அடிக்கடி மாற்றாமல் உள்ளதால் பாசி படிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. தற்போது குளத்துக்கு பக்தர்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் எந்தவித தடுப்பும் அமைக்கவில்லை. ஆனால் சந்தியாவதனம் செய்ய மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் 3 மாணவர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அலட்சியம்தான் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.