Thursday, May 1, 2025
Home » திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் கொடுத்த நகையை திருப்பி கேட்டதால் தாக்குதல்: கலெக்டர் அலுவலகம் எதிரே குடும்பத்துடன் மறியல்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் கொடுத்த நகையை திருப்பி கேட்டதால் தாக்குதல்: கலெக்டர் அலுவலகம் எதிரே குடும்பத்துடன் மறியல்

by Ranjith

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் மனைவி சிவகாமி(50). இவரிடம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேந்திரன்(49). அவரது மனைவி கவிதா(45) ஆகியோர் கடந்த 16.2. 2020ல் நிலம் பத்திரப்பதிவு செய்வதற்காக அவசர தேவைக்காக 6 சவரன் நகையை வாங்கியுள்ளனர். இரண்டு வாரத்திற்குள் தருவதாக கூறியதால் நம்பிக்கையின் பேரில் சிவகாமி கொடுத்துள்ளார். ஆனால் வாங்கிய நகையை திருப்பி தராமல் கடந்த 3 வருடங்களாக அலைக்கழித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி சிவகாமி நேரில் போய் கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளி காயப்படுத்தி உள்ளனர். இது குறித்து சிவகாமி நிலம் பத்திரப்பதிவு செய்வதற்காக நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்த 6 சவரன் நகையை திருப்பி தராமல் அலைக்கழித்ததுடன் திருப்பி கேட்டதற்கு தாக்கியதாக ராஜேந்திரன் மற்றும் கவிதா மீது கடம்பத்தூர் காவல் நிலையத்தில் சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆனால் ராஜேந்திரன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த விசாரணையும் நடத்தாமல் நகையை வாங்கித் தராமல் இருந்ததுடன், நகையை கொடுத்தவர்களை காவல் துறையினர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவகாமி மற்றும் அவரது மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் கொடுக்க வந்தனர். ஆனால் காவல் துறையினர் இவர்களை தடுத்து நிறுத்தியதால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது, எங்களை கைது செய்ய முற்பட்டால் ஆடைகளை கலைந்து போராட்டம் நடத்துவேன் என தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த போலீசார் செய்வதறியாது தவித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் டிஎஸ்பி அனுமந்தன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi