திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலைய அருகே நகராட்சிக்குட்பட்ட 27வது வார்டு வரதராஜ நகர் பகுதிக்கு செல்ல கற்குழாய் தெரு உள்ளது. இந்த தெருவில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். அவற்றை இடிப்பதற்காக நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகளை அகற்ற கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை.
இந்நிலையில் நேற்று நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திர ஷா தலைமையில் பொறியாளர் நாகராஜ், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், நகர அமைப்பு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரங்களுடன் கற்குழாய் தெருவிற்கு சென்றனர். அப்போது, ஆக்கிரமிப்பு 10க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதற்கு வீட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர், வீட்டின் சுவற்றின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சுமார் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
உடனே திருவள்ளூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கீழே இறங்கி வந்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்திருந்த வீடுகளை இடிக்கும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து தார் சாலை அமைக்கும் பணி இன்னும் சில நாட்களில் நடைபெறும் என நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திர ஷா தெரிவித்தார்.