திருத்தணி: குறைந்தபட்ச கூலி உயர்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர்கள் 20 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று நேற்று வேலைக்கு திரும்பினர். திருத்தணி பகுதியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாக விசைத்தறி தொழில் உள்ளது. குறைந்தபட்ச கூலி உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் கடந்த மாதம் 17ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதனால், பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், புச்சி ரெட்டிப்பள்ளி, ஸ்ரீகாளிகாபுரம், அத்திமாஞ்சேரிபேட்டை, சொரக்காய்பேட்டை, வங்கனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியது. விசைத்தறி இயக்குவது, பாவுக்கு பசை, சாயம் போடுதல், பாவு ஓட்டுதல், நூல் இழத்தல் உள்ளிட்ட நெசவுத் தொழில் முடங்கி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கபப்ட்டது.
இதனையடுத்து அண்ணா விசைத்தறி நெசவாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் தொழிலாளர் ஆணையம், மாவட்ட நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கூலியை உயர்த்தி வழங்க நெசவாளர்களுக்கு பாவு, நூல் வழங்கும் மொத்த வியாபாரிகள் முன்வராததால், பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் சமையல் உதவியாளர் வேலைக்குச் செல்ல பேருந்தில் பயணம் செய்த அம்மையார்குப்பம் நெசவாளர்கள் 4 பேர் பேருந்து விபத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதனால் நெசவாளர்கள் பெரும் சோர்வடைந்து அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருவதை கருத்தில் கொண்டு கூலி உயர்வை வலியுறுத்தி தொடங்கிய போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நேற்று நெசவாளர்கள் வசித்து வரும் அனைத்து பகுதிகளிலும் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். கடந்த 20 நாட்களாக சத்தமின்றி முடங்கி காணப்பட்ட தறிக் கூடங்கள் மீண்டும் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளன.