திருச்சி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதி மூலம் பாஜ அரசு 14 கேள்விகளை கேட்க வைத்துள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார். திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: திருச்சியில் 31ம் தேதி நடைபெற இருந்த மத சார்பின்மையை காப்போம் பேரணி, ஜூன் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் மீதும், மதசார்பின்மை, ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை உள்ள அனைவரும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசு தலைவரை கொண்டு பாஜ அரசு 14 கேள்விகளை கேட்க வைத்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் வலுவாக உள்ளது. வேறு எந்த கூட்டணியும் கூட்டணி என்கிற வடிவத்தோடு இல்லை. அதிமுக, பாஜ இணைந்து தேர்தலை சந்திக்கும் என இருகட்சி தரப்பிலும் கூறியுள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை. அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தேமுதிக உள்ளிட்டவர்கள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. எனவே வரும் 2026 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.