Wednesday, July 9, 2025
Home செய்திகள் மேகாலயா சம்பவம் போல திருமங்கலம் அருகே கடத்தல் நாடகம் சென்னை இன்ஜினியரை தாக்கி விட்டு காதலனுடன் தப்பிய புது மணப்பெண்

மேகாலயா சம்பவம் போல திருமங்கலம் அருகே கடத்தல் நாடகம் சென்னை இன்ஜினியரை தாக்கி விட்டு காதலனுடன் தப்பிய புது மணப்பெண்

by Arun Kumar

திருமங்கலம்: திருமங்கலத்தில் முன்னாள் காதலனுடன் செல்வதற்காக, சென்னையில் இன்ஜியராக வேலை செய்யும் கணவர் மீது தாக்குதல் நடத்தி, புது மணப்பெண் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சுவாமிமல்லம்பட்டியை சேர்ந்தவர் விஜயபிரகாஷ் (29). சென்னையில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், கரிசல்காளன்பட்டியை சேர்ந்த சுபலட்சுமிக்கும் (22) கடந்த மே 28ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமங்கலம் அருகே விடத்தகுளத்தில் உள்ள தங்கை வீட்டுக்கு வந்திருந்த விஜயபிரகாஷ், மனைவி சுபலெட்சுமியுடன் நேற்று முன்தினம் தங்களது ஊருக்கு டூவீலரில் புறப்பட்டனர். சுங்குராம்பட்டி கிராமம் அருகே சென்றபோது, அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் சிவப்பு நிற கார் அருகே நின்றிருந்த 30 வயது வாலிபர்கள் 3 பேர், திடீரென சாலையின் குறுக்கே வந்து டூவீலரில் வந்த விஜயபிரகாஷை நிறுத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

நிலைதடுமாறி விஜயபிரகாஷ் கீழே விழ, கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சுபலெட்சுமியை காரில் கடத்தி திருமங்கலம் நோக்கி சென்றது. தனது கண்முன்னே மனைவியை கடத்தி சென்ற மர்மக் கும்பல் குறித்து விஜயபிரகாஷ், திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் சுங்குராம்பட்டி கிராமத்திற்கு சென்று நேரடி விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு புது மணப்பெண்ணை காரில் கடத்தி சென்ற மர்மக் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘காரில் கடத்தப்பட்ட சுபலட்சுமி, சுங்குராம்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் பிறகு தான், சிவில் இன்ஜினியரான விஜயபிரகாசுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று விஜயபிரகாஷின் தங்கை வீட்டிற்கு தம்பதி சென்றுள்ளனர். அங்கிருந்து, தனது கணவருடன் தனியாக தான் வருவதாக வாட்ஸ்அப் மூலமாக ரமேஷிற்கு சுபலட்சுமியே தகவல் தெரிவித்துள்ளார்.

அவரது திட்டத்தின் படியே, ரமேஷ் ஆட்களை வைத்து விஜயபிரகாஷை வழிமறித்து தாக்கி சுபலட்சுமியை அழைத்துச் சென்றுள்ளார். ரமேஷ், சுபலட்சுமியின் செல்போன் சிக்னல்களை வைத்து இருவரையும் தீவிரமாக தேடி வருகிறோம்’’ என்றனர். சமீபத்தில் மேகாலயாவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதே பாணியில் முன்னாள் காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi