உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா பத்தாம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த ஆக.23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடந்த இத்திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிறைவு நாளான இன்று பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. காலை 6மணிக்கு சர்வ அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரதவீதி வழியாக வலம் வந்தது.
நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், பணியாளர்கள் ராஜ்மோகன், ஆவுடையப்பன், செல்வகுத்தாலம், பால்ராஜ், மாரிமுத்து, மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர். பாதுகாப்பு பணியில் காவல்துணைக்கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதாகுமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.