*1.7 கிலோ தங்கம், 22 கிலோ வெள்ளி காணிக்கை
திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வருமானமாக ரூ.3.42 கோடி வசூலாகி உள்ளது. மேலும் 1.7 கிலோ தங்கம், 22.791 கிலோ வெள்ளி காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்டுள்ளது.திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி நேற்று முன்தினம் உண்டியல் எண்ணிக்கை கோயில் வசந்த மண்டபத்தில் நடந்தது.
தக்கார் அருள்முருகன் தலைமை வகித்து, உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டார். இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் ஆறுமுகம், நாகவேல், கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, தக்காரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதன்படி உண்டியல் எண்ணிக்கையில் 3 கோடியே 42 லட்சத்து 28 ஆயிரத்து 824 ரூபாயும் (ரூ.3,42,28,824), தங்கம் 1 கிலோ 701 கிராம், வெள்ளி 22 கிலோ 791 கிராம், பித்தளை 7.04 கிலோ, செம்பு 44.124 கிலோ, தகரம் 9.02 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1237ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.இதேபோல் கோயில் உண்டியலில் வெள்ளியிலான சுவாமி முகம் மற்றும் வேல்களும், வெளிமாநில லாட்டரி சீட்டுகளும் கிடைத்தன.