பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் தமிழகத்தின் 100வது ரத்த வங்கியைமாவட்ட கலெக்டர் பிரதாப் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்படுவோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்ததால் பொன்னேரியில் ரத்த வங்கி ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்தனர். இந்நிலையில் 1000 சதுர அடியில் கட்டப்பட்ட ரத்த வங்கியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கறிஞர் துரை.சந்திரசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் பொன்னேரி தலைமை மருத்துவர் கல்பனா கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளின் வார்டுகள் அவர்களுக்கு உணவு தயாரிக்கப்படும் உணவுக்கூடம் ஆகியவற்றை கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் பிரதாப் தமிழகத்திலேயே பொன்னேரி அரசு மருத்துவமனையில் 100வது ரத்த வங்கி திறக்கப்பட்டுள்ளது. இதனால் ரத்தம் சேமிப்பது மட்டுமின்றி ரத்தம் கொடுத்து மற்ற பகுதிகளுக்கும் எடுத்து செல்ல வசதியாக இருக்கும். அனைத்து அரசு மருத்துமனைகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். பொன்னேரி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். நாய்கடி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்வில் பொன்னேரி தாசில்தார் சிவக்குமார் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி குணசேகர் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் பொன்னேரி காவல்துறை உதவி ஆணையர் சங்கர் மற்றும் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் மருத்துவர்கள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.