தமிழகத்தின் இயற்கை எழில் சூழ்ந்த அழகிய மாவட்டங்களின் பட்டியலில் தென்காசிக்கு முக்கிய இடம் உண்டு. ஜில்லென்ற சாரல் விழும் குற்றால அருவிக்காகவே இந்த மாவட்டத்தை நோக்கி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருபவர்கள் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, செண்பகா அருவி என பல அருவிகளில் குளித்துவிட்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகில் லயித்துவிட்டு நிறைவான மனதுடன் செல்வார்கள். இத்தகைய இயற்கை வனப்பு மிகுந்த தென்காசி மாவட்டம் விவசாயத்திலும் குறிப்பிடத்தக்கஇடத்தைப் பிடித்திருக்கிறது.
தென்காசி, செங்கோட்டை, சிவகிரி தாலுகாக்களில் நெல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சங்கரன்கோவில் தாலுகாவில் தானியங்கள், பூக்கள் பயிரிடப்படுகிறது. வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பாவூர், மேலப்பாவூர், சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, ஆவுடையானூர், நாகல்குளம், குறும்பலாப்பேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர், பெத்தநாடார்பட்டி, அரியப்புரம், செட்டியூர், பனையடிப்பட்டி, குலசேகரப்பட்டி, மேலபட்டமுடையார்புரம், மகிழ் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் விளைவித்து வருகிறார்கள். இதில் பாவூர் சத்திரம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகள் மலர் சாகுபடிக்கு பேர் போன பகுதிகளாக விளங்குகின்றன.
சிவகாமிபுரம், வடக்கு சிவகாமிபுரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, மகிழ், நாகல்குளம், பெத்தநாடார்பட்டி, சாலைப்புதூர், அடைக்கலப்பட்டணம், கழநீர்குளம், பட்டமுடையார்புரம், ஆண்டிப்பட்டி, கரும்புளியூத்து,வள்ளியம்மாள்புரம், கோவிலூற்று, பூலாங்குளம், தெற்கு மடத்தூர், வடக்குமடத்தூர், மயிலப்புரம், புங்கம்பட்டி, வெங்கடாம்பட்டி, ஆவுடையானூர், ஆரியங்காவூர், செட்டியூர், கல்லூரணி, மடத்தூர், குலசேகரப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் மரிக்கொழுந்து, மல்லி, பிச்சி, கனகாம்பரம், சம்மங்கி, மஞ்சள் கேந்தி, துளசி, ரோஜா, முல்லைப்பூ, அரளி உள்ளிட்ட மலர் வகைகளை அதிகளவில் சாகுபடி செய்கிறார்கள். இந்தப் பகுதிகளில் திரும்பிய திசைகளிலெல்லாம் வெள்ளையும், மஞ்சளுமாக செவ்வந்தி, பிச்சி, மல்லிகை, கேந்தி என மலர் வகைகளில் மணம் வீசுகின்றன.
இதனால் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவகாமிபுரம் ஒரு சிறந்த மலர்ப்பிரதேசமாகவே விளங்குகிறது. இங்குள்ள பூ மார்க்கெட் தோவாளை மார்க்கெட் போலவே பிரசித்தி பெற்ற மார்க்கெட்டாக விளங்குகிறது. சுற்றுவட்டார விவசாயிகள் உற்பத்தி செய்யும் பூக்கள் இங்கிருந்து கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சிவகாமிபுரத்தில் பல்வேறு மலர் வகைகள் சாகுபடி செய்யப்பட்டபோதும் இங்கு விளையும் மரிக்கொழுந்துக்கென்று தனி மவுசு இருக்கிறது. இதனால் இங்கு பல விவசாயிகள் மரிக்கொழுந்து சாகுபடியில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மரிக்கொழுந்து சாகுபடியில் ஈடுபட்டு வரும் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்ற விவசாயியைச் சந்தித்து பேசினோம்.
“ எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் மல்லி, அரளி, பிச்சி, சாமந்தி உள்ளிட்ட மலர் வகைகளை சாகுபடி செய்கிறோம். எங்கள் பகுதியில் மலர்ச்சந்தை இருப்பதால் நாங்கள் பெரும்பாலும் மலர் வகைகளைத்தான் சாகுபடி செய்வோம். நான் மட்டுமல்ல எங்கள் பகுதிகளைச் சேர்ந்த பல விவசாயிகளும் மலர் விவசாயத்தில் பல காலமாக இருக்கிறார்கள். பல மலர் வகைகளை சாகுபடி செய்தாலும் மரிக்கொழுந்தையும் நாங்கள் தொடர்ச்சியாக பயிர் செய்கிறோம். இதற்கான தேவை எப்போதும் இருக்கிறது. இதை சில இடங்களில் மட்டுமே விளைவிக்கிறார்கள். எங்கள் மண்ணுக்கு இது நன்றாக வருகிறது. இதனால் நாங்கள் தொடர்ச்சியாக மரிக்கொழுந்து பயிரிடுகிறோம்’’ என மரிக்கொழுந்தின் மகத்துவம் குறித்து அடுக்கிக்கொண்டே போன சந்திரமோகனிடம் மரிக்கொழுந்து சாகுபடி விபரங்கள் குறித்து கேட்டோம்.
“ மரிக்கொழுந்து பயிரிட கொஞ்சம் செலவு அதிகமாகும். இதனால் நான் 30 சென்ட் நிலத்தில் மட்டுமே பயிரிட்டு இருக்கிறேன். நடவுக்கு தேவையான நாற்றுகளை சேலத்தில் இருந்து வாங்கி வந்தேன். 30 சென்டில் நடவு செய்ய 250 முடி நாற்று தேவைப்பட்டது. நடவுக்கு முன்னதாக நிலத்தை நன்றாக புழுதியோட்டி உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது தொழுவுரம் இடுவோம். உழவுக்குப் பிறகு தண்ணீர் பாய்ச்சி, அந்த ஈரத்தில் மரிக்கொழுந்து நாற்றுகளை நெருக்கமாக நடுவோம். ஒரு ஜான் அளவுள்ள இடத்தில் 3, 4 நாற்றுகள் நடுவோம். அந்தளவுக்குநெருக்கமாகத்தான் நடுவோம்.
இப்போது உள்ள மரிக்கொழுந்தை கடந்த ஜனவரி மாதத்தில் நடவு செய்தேன். நடவு செய்த மறுநாளில் லேசான பாசனம் செய்வோம். 4, 5 நாட்களில் நாற்றுகள் தெளிவாகி பசுமையாக காட்சியளிக்கும். அதில் இருந்து நாற்றுகள் துளிர்த்து வளர ஆரம்பிக்கும். 4வது நாளில் மீண்டும் பாசனம் செய்வோம். நடவு செய்ததில் இருந்து 10வது நாளில் டிஏபி அல்லது 20:20:20 உரத்தை இடுவோம். இந்த 30 சென்ட் நிலத்திற்கு15-20 கிலோ உரம் தேவைப்படும். மரிக்கொழுந்தில் பச்சை நிறத்தில் உள்ள ஒரு புழு தாக்கும். இதனைக் கட்டுப்படுத்த நடவில் இருந்து ஒரு வாரத்தில் எண்டோசல்பான் உள்ளிட்ட மருந்தைத் தெளிப்போம். இதேபோல் புழுக்கள் வரும் நேரத்தில் மீண்டும் மருந்து தெளிக்கலாம். தேவைப்படும்போது களைக்கொல்லியும் தெளிப்போம். நடவில் இருந்து சரியாக ஒரு மாதத்தில் முதல் அறுவடையை மேற்கொள்ளலாம். இந்த முதல் அறுவடையில் சுமார் 100 கிலோ மரிக்கொழுந்து கிடைக்கும். அறுவடை முடிந்ததும்உரமிட்டு பாசனம் செய்வோம்.
மீண்டும் அடுத்த 30வது மாதத்தில் 2வது அறுவடையை மேற்கொள்ளலாம். இந்த அறுவடை முடிந்ததும் முன்பு சொன்னது போல உரமிட்டு தண்ணீர் பாய்ச்சுவோம். இரண்டாவது அறுவடையில் 200 கிலோ மரிக்கொழுந்து கிடைக்கும். 3 மற்றும் 4வது அறுவடை ஏப்ரல், மே மாதத்தில் வரும் என்பதால் மகசூல் சற்று குறையும். மரிக்கொழுந்து பொதுவாக வெயில் காலங்களில் நன்றாக விளைச்சல் தராது. செடிகள் சோர்ந்து உற்பத்தி குறைவாக இருக்கும். ஜூன் மாதத்தில் மழை பொழிய ஆரம்பிக்கும்போது உற்பத்தி அதிகமாகும். ஒரு அறுவடையில் 300 கட்டுகளுக்கு மேல் கூட கிடைக்கும்.
மரிக்கொழுந்து செடி 9 மாதம் வரை பலன் கொடுக்கும். அதன்பிறகு செடிகள் அழுகி உற்பத்தி குறைய ஆரம்பித்து விடும். இந்த 9 மாதத்தில் எனது 30 சென்ட் நிலத்தில் சுமார் 1500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். அறுவடை செய்யும் மரிக்கொழுந்தை மலர்ச்சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்துவிடுவோம். அங்கு ஒரு கிலோ மரிக்கொழுந்துக்கு ரூ.100 விலை கிடைக்கும். முகூர்த்த நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் ஒரு கிலோ மரிக்கொழுந்து ரூ.150 வரை விற்பனை செய்யப்படும். சீசன் இல்லாத காலங்களில் ஒரு கிலோ மரிக்கொழுந்து ரூ.50க்கும் விற்பனை செய்யப்படும். ஆனால் எப்படியும் சராசரி விலையாக ரூ.100 கிடைத்துவிடும். 1500 கிலோ மரிக்கொழுந்து மூலம் ரூ.1.5 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் ரூ.70 ஆயிரம் செலவு போனாலும் ரூ.80 ஆயிரம் லாபமாக கிடைக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
சந்திரமோகன்: 99409 26952
தென்காசி மாவட்டத்தில் மலர் உற்பத்தியில் முதல் இடம்பிடிப்பது சங்கரன்கோவில். அதற்கடுத்த இடத்தைப் பிடித்திருப்பது பாவூர்சத்திரம்.
அதிகளவில் பூக்கள் உற்பத்தி ஆகும் பாவூர்சத்திரம் பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைத்தால் தங்களுக்கு நேரடியாகவும், கூடுதலாகவும் விலை கிடைக்க வாய்ப்பு எனக்கூறும் விவசாயிகள், இப்பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்கள். மலர் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பாவூர் சத்திரம் பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை மலர் கண்காட்சி நடத்த வேண்டும் அறுவடை செய்யும் பூக்களை இருப்பு வைத்து பாதுகாக்கும் வகையில் குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்கள்.