தேனி: தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது கட்சிக்காரர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில் அவருக்கு கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளில் மற்றொரு அதிர்ச்சியான காட்சி பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
அதில் கடந்த ஜனவரி 14ம் தேதியன்று ஒருவரை தேவதானப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த காவலர்கள் அவரை லத்தி மற்றும் கால்களால் சரமாரியாக தாக்குவது பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்தும் சிசிடிபி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். ஆய்வாளர் அபூதுல்யா, காவலர்கள் மாரிச்சாமி, பாண்டி, வாலி உள்ளிட்ட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றபட்டுள்ளனர்.