Thursday, May 15, 2025
Home செய்திகள்Showinpage நாட்டின் 52வது தலைமை நீதிபதியாக மே 14ல் பதவி ஏற்கிறார் பி.ஆர். கவாய்: ஒன்றிய அரசுக்கு சஞ்சீவ் கண்ணா பரிந்துரை

நாட்டின் 52வது தலைமை நீதிபதியாக மே 14ல் பதவி ஏற்கிறார் பி.ஆர். கவாய்: ஒன்றிய அரசுக்கு சஞ்சீவ் கண்ணா பரிந்துரை

by Karthik Yash

புதுடெல்லி: சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெறுவதால் இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் மே 14 ஆம் தேதி பதவியேற்கிறார். இந்தியாவின் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2024 நவம்பர் 11 அன்று பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் வரும் மே 13 அன்று முடிகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரம்பரிய வழக்கப்படி புதிய தலைமை நீதிபதி பெயரை பரிந்துரை செய்யும்படி ஒன்றிய சட்ட அமைச்சகம், தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் கேட்டு இருந்தது.

இதையடுத்து புதிய தலைமை நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி பி.ஆர்.கவாய் பெயரை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற்ற ஒரு நாளுக்குப் பிறகு மே 14 அன்று நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் பி.ஆர். கவாய் நவம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளதால், அவர் சுமார் 6 மாதங்கள் மட்டுமே இந்திய தலைமை நீதிபதியாக இருப்பார்.

மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்த பி.ஆர். கவாய், 1985 ஆம் ஆண்டு மார்ச் 16ம் தேதி வக்கீலாக பதிவு செய்தார். மகாராஷ்டிர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் மற்றும் நீதிபதியான பாரிஸ்டர் ராஜா போன்சலேவுடன் பணியாற்றினார். பின்னர் அவர் 1987 முதல் 1990 வரை பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தனியாக பயிற்சி செய்தார். அதன்பின், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான விஷயங்களில் முக்கியமாக பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் பயிற்சி செய்தார். அவர் ஆகஸ்ட் 1992 இல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞராகவும், கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார்.

2000ஆம் ஆண்டில் நாக்பூர் அமர்வின் அரசு வழக்கறிஞராகவும், அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். நீதிபதி கவாய் 2003ஆம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2005ல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார். 2019 மே 24ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய், மோடி அமல்படுத்திய 2016 பணமதிப்பிழப்பு முடிவை உறுதி செய்த அமர்விலும், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவித்த அமர்விலும் இடம் பெற்று இருந்தார். மே 14ல் பதவி ஏற்கும் பி.ஆர்.கவாய் வரும் நவம்பர் 23ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

* 2வது தலித் தலைமை நீதிபதி
பி.ஆர்.கவாய் மே 14ஆம் தேதி இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார், நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் இரண்டாவது தலித் என்ற பெருமையை நீதிபதி கவாய் பெறுகிறார். 2007ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி நாட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற கே.ஜி.பாலகிருஷ்ணன் 2010 மே 11 வரை அந்த பதவியில் நீடித்தார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi