Sunday, June 15, 2025
Home செய்திகள்குற்றம் அரிவாளால் சரமாரியாக வெட்டி தந்தையை கொன்ற மகன்: நெல்லையில் பயங்கரம்

அரிவாளால் சரமாரியாக வெட்டி தந்தையை கொன்ற மகன்: நெல்லையில் பயங்கரம்

by Neethimaan

தென்காசி: அரிவாளால் தந்தையை சரமாரியாக வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பக்கமுள்ள மலையான்குளத்தைச் சேர்ந்தவர் செல்லையா (70). விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள். 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு கந்தசாமி, கணேசன், முருகையா என்ற 3 மகன்களும், சண்முகத்தாய் என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி உள்ளூரில் வசித்து வருகின்றனர். மூத்தமகன் கந்தசாமியுடன் செல்லையா வசித்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு வயலை விற்று வந்த தொகையை 3 மகன்களுக்கும், மகளுக்கும் சரி சமமாக செல்லையா பிரித்துக் கொடுத்து விட்டார். தனக்கு என்று ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை வைத்திருந்தார்.

இந்நிலையில் செல்லையாவின் 2வது மகன் கட்டிட தொழிலாளியான கணேசன், தான் மிகவும் சிரமத்தில் இருப்பதால் அந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை தந்து உதவும்படி தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்து விட்டார். இதனால் குடிப்பழக்கம் உடைய கணேசன் தினமும் குடித்து விட்டு வந்து தந்தையிடம் நிலத்தை விற்ற பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். நேற்றும் இந்த தகராறு நடந்தது. அப்போது கணேசன் (36), தான் வைத்திருந்த அரிவாளால் செல்லையாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். செல்லையாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார்.

இதுகுறித்து செல்லையாவின் 3வது மகன் முருகையா, குருவிகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மலையான்குளத்தில் பதுங்கியிருந்த கணேசனை கைது செய்து, பாளை மத்திய சிறையிலடைத்தனர். கணேசனுக்கு வேளாங்கன்னி என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi