திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டி பன்றிமலை அமைதிச்சோலை அருகே கடந்த 13ம் தேதி எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கன்னிவாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கொல்லப்பட்ட இளம்பெண் மாரியம்மாள் (21), மதுரை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தவர் என்பதும், நத்தம் சாணார்பட்டியை சேர்ந்த பிரவீன் (23) என்பவரை காதலித்து வந்ததும் தெரிய வந்தது. ஏப். 12ம் தேதி பைக்கில், மாரியம்மாளை ஏற்றிக்கொண்டு அமைதிச்சோலைக்கு பிரவீன் சென்றது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து பிரவீனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாரியம்மாள் வற்புறுத்தியதால் கன்னிவாடி அருகே உள்ள அமைதிச்சோலை பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. போலீசார் பிரவீனை கைது செய்தனர்.