Saturday, May 17, 2025
Home செய்திகள் பேரவையில் மசோதா தாக்கல் செய்தார் அமைச்சர் கோவி.செழியன்; கலைஞர் பல்கலைக்கழகத்துக்கு முதல்வரே வேந்தராக இருப்பார்: நான்கு மாவட்டங்களை சேர்ந்த 17 கல்லூரிகள் அடங்கும்

பேரவையில் மசோதா தாக்கல் செய்தார் அமைச்சர் கோவி.செழியன்; கலைஞர் பல்கலைக்கழகத்துக்கு முதல்வரே வேந்தராக இருப்பார்: நான்கு மாவட்டங்களை சேர்ந்த 17 கல்லூரிகள் அடங்கும்

by Neethimaan

சட்டசபையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று கலைஞர் பல்கலைக்கழக சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். மசோதாவில் கூறியிருப்பதாவது: பாரதிதாசன் பல்கலைக்கழகம், அரியலூர், கரூர், நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மற்றும் பெரும்பகுதிகளை கொண்டதாக உள்ளது. டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் உள்ள மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் கஷ்டப்படுகிறது. எனவே அரியலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது.

17 கல்லூரிகள் இந்த பல்கலையின் கீழ் வரும். கலைஞர் பல்கலைக்கழகத்தின் தலைமையகம், கும்பகோணம் நகராட்சியின் எல்லையிலோ அல்லது அந்த எல்லையின் 25 கி.மீ. சுற்றளவிற்குள் ஏதாவது ஒரு இடத்திலோ உருவாக்குவதற்கான சட்டமசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த கல்லூரிக்கான பரப்பிடத்திற்குள் தங்கி இருப்பவர், அஞ்சல் வழிக் கல்வி மூலமாக படித்து பட்டம் பெறலாம். இந்தப் பல்கலைக்கழகத்தை வேந்தர், இணை வேந்தர், துணை வேந்தர், பதிவாளர், புலத் தலைவர், நிதி அலுவலர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நிர்வகிப்பார்கள். பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழகத்தின் முதல்வர் இருப்பார்.

பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டம் வழங்குவார். பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளுக்கு வேறு நபர்களை வேந்தர் நியமிக்கலாம். உயர்கல்வித் துறை அமைச்சர், இணை வேந்தராக செயல்படுவார். குழு நியமிக்கப்பட்டு, அதன் மூலம் 3 பெயர் தேர்வு செய்யப்பட்டு, அதில் ஒருவரை துணை வேந்தராக வேந்தர் நியமிப்பார். சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது அரசின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு குறையாதவர் அல்லது அதிலிருந்து ஓய்வு பெற்றவர் அல்லது சிறந்த கல்வியாளர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம்.

துணை வேந்தர் 3 ஆண்டுகள் பதவி வகிக்கலாம். மேலும் 3 ஆண்டுகளுக்கு அவர் மறு நியமனம் செய்யப்படலாம். துணை வேந்தரை பணி நீக்கம் செய்வதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும். அவர் மீது விசாரணையை ஐகோர்ட்டின் நீதிபதி அல்லது தலைமைச் செயலாளர் மேற்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும். வேந்தர் மற்றும் இணை வேந்தர் வருகை தராவிட்டால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை துணை வேந்தர் நடத்துவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi