Sunday, June 15, 2025
Home செய்திகள்Showinpage ஆண்டிபட்டி அருகே தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: மணமகன் வீட்டார் அதிர்ச்சி; மண்டபத்தில் பரபரப்பு

ஆண்டிபட்டி அருகே தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: மணமகன் வீட்டார் அதிர்ச்சி; மண்டபத்தில் பரபரப்பு

by Neethimaan

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, தாலிகட்டும் நேரத்தில் விருப்பமில்லை என திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிரார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். உறவினர்கள் மூலமாகவும் மற்றும் திருமண தகவல் மையம் மூலமாகவும் பெண் தேடினர். இவர்களை, புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் வீட்டார் தொடர்பு கொண்டு பேசினர். பின்னர் இருவீட்டாரும் சேர்ந்து ஒரு நல்ல நாளில் திருமண பேச்சு நடத்தினர்.

மாப்பிள்ளை, பெண் பார்க்கும் படலமும் நடைபெற்றது. பெண் வீட்டாரும் செய்ய வேண்டிய வரதட்சணை ஆகியவை பேசி முடிக்கப்பட்டன. இருவீட்டார் சம்மதத்துடன் ஆண்டிபட்டி அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் செய்ய தடபுடலாக ஏற்பாடு நடந்தது. நேற்று முன்தினமே புதுச்சேரியில் இருந்து மணப்பெண், பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். நேற்று முன்தினம் இரவு மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது மணமகனின் பெற்றோருக்கும், மணமகளின் பெற்றோருக்கும் சிறு, சிறு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றியது.

உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். அதன்பிறகு திருமண சடங்குகள் இரவு முழுவதும் நடந்தது. நேற்று காலை மணமேடைக்கு மணமகனும், மணமகளும் அழைத்து வரப்பட்டு அமர வைக்கப்பட்டனர். தாலிகட்டும் முன் நடக்க வேண்டிய சடங்குகள் நடந்தன. மணமகன் தாலியை எடுத்து மணமகளின் கழுத்தில் கட்டப் போன நேரத்தில் திடீரென மணமகள் எழுந்து ஆவேசம் அடைந்தவராய், ‘இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை’ என மாலையை கழற்றி வைத்துவிட்டு விறுவிறுவென மணமகள் அறைக்கு சென்றுவிட்டார். இதனால், திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருமணத்திற்கு வந்த இருதரப்பு உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

மணமகன் பெற்றோரிடம், மணமகள் பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூகமான முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. பின்னர் மணமகன் தரப்பில் இருந்து பெண் வீட்டாரிடம் திருமணத்திற்கு செய்த செலவை தரவேண்டும் என கேட்டனர். மணமகள் குடும்பத்தினர் குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால், திருமணத்திற்கு உறவினர்கள் உள்பட உள்ளூர்காரர்கள் அதிர்ச்சியுடன் வீடு திரும்பினர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi