1-7-2025 – 2-7-2025 ஆனித் திருமஞ்சனம்
முன்னுரை
நம் நாட்டின் தொன்மையான இரண்டு சமயங்கள் சைவமும் வைணவமும். சைவர்களின் தலைமைக் கோயில் தில்லைத் திருத்தலம் என்று அழைக்கப்படும் சிதம்பரம். இதனை பூலோக கைலாசம் என்பார்கள். வைணவத்தில் தலைமைக் கோயில் திருவரங்கம். இதனை பூலோக வைகுந்தம் என்று அழைப்பார்கள். இந்த இரண்டும் தமிழ்நாட்டிலே இருப்பது மிகப்பெரிய சிறப்பு. இரண்டு பெருமான்களையும் ராஜா என்கின்ற அடைமொழி யோடு அழைப்பார்கள். சிதம்பரத்தில் நடராஜன். திருவரங்கத்தில் ரங்க
ராஜன். சிதம்பரத்தில் இன்னொரு சிறப்பு இங்கே கோவிந்தராஜனும் இருக்கின்றார். பூலோக கைலாயமான தில்லைத் திருத் தலத்தில் உள்ள மூர்த்தங்களின் சிறப்பையும், ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சன வைபவத்தின் சிறப்பையும் காண்போம்.
ஆனியும் மார்கழியும்
ஒரு வருடத்தை இரண்டாகப் பிரிப்பார்கள். ஒன்று தட்சிணாயனம். மற்றொன்று உத்தராயணம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் காலம். தட்சிணாயனம் என்பது அவர்களின் இரவு காலம். ஒருநாள், பகல் இரவு என்று இரண்டு பகுதிகளாக இருப்பது போல, ஒரு ஆண்டு இரண்டு பகுதிகளாக இருக்கிறது. இதில் இன்னொரு சுவையான விஷயம் என்ன என்று சொன்னால். மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அந்தக் கணக்கின் அடிப்படையில் ஆறு மாத காலத்தை தேவர்களின் பகல் காலமாகவும், அடுத்த ஆறு மாத காலத்தை தேவர்களின் இரவு காலமாகவும் நம்முடைய சமயங்கள் சொல்லும். இதில் தேவர்களின் பகல் காலமான உத்தராயணம் தை மாதத்தில் ஆரம்பித்து ஆனி மாதத்தோடு நிறைவு பெறும். தட்சிணாயனம் எனப்படும் தேவர்களின் இரவுக் காலம் ஆடியில் துவங்கி மார்கழியில் நிறைவு பெறும். உத்தராயணத்தில் கடைசி மாதம் ஆனி தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. இந்த இரண்டு மாதங்களும் சிவபெருமானுக்கு முக்கியமான மாதங்கள். ஆனியில் ஆனித் திருமஞ்சனமும், மார்கழியில் ஆதிரை தரிசனமும் உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ளும் உன்னத விழாக்கள்.
சிவபெருமான் அபிஷேகப் பிரியன்
ஆனித் திருமஞ்சனம் என்பது பல சிவாலயங்களிலும் நடைபெறுவது தான் என்றாலும், சிதம்பரத்தில் தான் அது விசேஷம். எப்படி வைணவத்தில் வைகுண்ட ஏகாதசி எல்லா தலங்களிலும் நடந்தாலும் ரங்கத்தில் பிரதானமாக இருப்பது போல, சைவத்தில் ஆனித் திருமஞ்சனம் எல்லா ஆலயங்களிலும் நடைபெற்றாலும், சிதம்பரத்தில் மிக விசேஷமாக நடைபெறும். சிவபெருமான் அபிஷேகப் பிரியன் என்பார்கள். அவருக்கு பிடித்தமான இந்த அபிஷேகங்களில் ஒன்றுதான் ஆனித் திருமஞ்சன விழாவாக விரிகிறது. குறிப்பாக, சிதம்பரம் தில்லை நடராஜர் பெருங் கோயிலில் நடைபெறும் இரண்டு வருடாந்திரப் பெரு விழாக்களில் ஆனித் திருமஞ்சனமும் மார்கழி திருவாதிரை தரிசனமும் மிகச் சிறப்பு பெற்றவையாகும். அந்த அடிப்படையில், இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சன வைபவம் கீழ்க்கண்டவாறு நடைபெற இருக்கின்றது.
ஆனித்திருமஞ்சனம்,சிதம்பரம், 2025
23 ஜூன் 2025 (திங்கட்கிழமை) காலை த்வஜாரோஹணம் எனும் கொடியேற்றம் நடைபெறும். அன்று இரவு தங்க, வெள்ளி மஞ்சத்தில் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறும். 24 ஜூன் 2025 (செவ்வாய்) இரவு வெள்ளி சந்திர பிரபை வாகனமும், 25 ஜூன் 2025, புதன்கிழமை) இரவு தங்க சூர்ய பிரபை வாகனமும், 26 ஜூன் 2025 (வியாழன்), இரவு, பூத வாகனம் உலாவும் நடைபெறும். 27 ஜூன் 2025, வெள்ளிக் கிழமை, இரவு வெள்ளி ரிஷப வாகனமும், 28 ஜூன் 2025 சனிக்கிழமை), இரவு யானை வாகனமும், 29 ஜூன் 2025 ஞாயிறு இரவு தங்க கைலாச வாகனமும், 30 ஜூன் 2025, திங்கட்கிழமை, இரவு தங்க ரதத்தில் பிட்சாடனர் உலாவும் வெகு சிறப்பாக நடைபெறும்.
சிதம்பரம் தேர்
பத்து நாள் திருவிழாவின் சிறப்பான இரண்டு நிகழ்ச்சிகள் தேரோட்டமும் அதனைத் தொடர்ந்து நடைபெறுகின்ற திருமஞ்சன வைபவமும் ஆகும். இவை இரண்டும் பல்லாயிரம் மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளாகும். ஜூலை 2025, செவ்வாய்க்கிழமை) காலை மகாரதோத்ஸவம் (தேரோட்டம்) நடைபெறும். அன்று காலை ரத யாத்ரா தானம் நடந்து தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும். பஞ்சமூர்த்திகள் அனைவரும் ஐந்து தேர்களில் பவனி வருவார்கள். அன்று இரவு ராஜசபையில் நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு லட்சார்ச்சனை நடைபெறும். அடுத்தநாள், அதாவது 2 ஜூலை 2025, (புதன்கிழமை), இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். இந்தக் காட்சியை காண்பதற்கு என்றே பல மணிநேரம் காத்திருந்து இடம் பிடித்து, நடராஜர் அபிஷேகத்தைக் கண்டு களிப்பார்கள். தொடர்ந்து அலங்கார வைபவம் நடைபெறும். அங்கிருந்து மதியம் 2 மணியளவில் ஆயிரங்கால் மண்டபம் வழியே ஆடிஆடி அற்புத தரிசனம் தந்து, கீழைக் கோபுரத்தில் அருகிலுள்ள பிரதான வாயில் வழியாக படிக்கட்டுகளில் இறங்கி, இரு பக்கமும் காத்திருக்கும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டே, ஆஸ்தானம் (ஞானாகாச சித்சபை) அடைவார். அங்கு கடாபிஷேகம் நடைபெறும். மறுநாள் 3 ஜூலை 2025 (வியாழன்) இரவு முத்துப் பல்லக்கு வைபவம் நடைபெறும்.
ஆறுகாலை பூஜையும் ஆறு அபிஷேகங்களும்
ஓர் நாளை வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று ஆறு பொழுதுளாகப் பிரித்தனர். இந்த ஒவ்வொரு பொழுதும் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் வேறுவேறு கால அளவாக இருக்கும். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியல் நேரம்; மாசி மாதம் – காலைப் பொழுது; சித்திரை மாதம் – உச்சிக் காலம்; ஆனி மாதம் – மாலை நேரம்; ஆவணி மாதம் – இரவு நேரம்; புரட்டாசி மாதம் அர்த்த ஜாமம்; இதை அடிப்படையாக கொண்டுதான் ஆலயங்களில் தினமும் ஆறுகால பூஜை நடத்துகிறார்கள். இந்த ஆறு காலங்களில் நடக்கும் பூஜைகளும், வழிபாடுகளும் ஆகம விதிகளின்படி முக்கியமானவை. ஆறு காலத்தைக் குறிக்கும் வகையில் சிவாலயங்களில் நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு தடவை அபிஷேகம் செய்வார்கள்.
ஆனி உத்திரம்
இதில் மூன்று அபிஷேகங்கள் திதியை அனுசரித்தும், மூன்று அபிஷேகங்கள் நட்சத்திரத்தை அனுசரித்தும் நடத்துகிறார்கள். மாசி சதுர்த்தசி, ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் திதியை வைத்து அபிஷேகம் நடத்துகிறார்கள். சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் நட்சத்திரத்தை வைத்து அபிஷேகம் நடத்துகிறார்கள். இந்த ஆறு அபிஷேகங்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேக பூஜைகள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.அதிலும் ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு “ஆனி உத்திரம்” என்றும் ஒரு பெயர் உண்டு.
சித்சபையில் ரகசிய பூஜை
ஜூலை மாதம் 2ஆம் தேதி அதிகாலை, சப்தமி திதி, உத்தர நட்சத்திரம், புதன்கிழமை, நான்கு மணியிலிருந்து ஆரம்பித்து, சிவகாமி சமேத நடராஜர் மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெறும். இதுவே ஆனித் திருமஞ்சனம். பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என இன்னும் பல வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு ஆனித் திருமஞ்சனம் நடைபெறும். இதைக் காண்பதற்கு கண்கள் இரண்டும் போதாது. திருஞானசம்பந்தர் திருமஞ் சனத்தைப்பற்றி அழகான ஒரு தேவாரத்தில் பாடுகின்றார்.
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்
அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங்
கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும்
பல் சடை பனிக்கால்
கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே
7 மணியிலிருந்து 11 மணி வரை திருவாபரண அலங்காரங்கள் செய்யப்படும். அதற்குப் பிறகு பஞ்சமூர்த்திகள் நான்கு தேர் வீதிகளிலும் வலம் வருவார்கள். சித்சபையில் ரகசிய பூஜை நடக்கும். பிற்பகல் பஞ்ச வாத்தியங்கள் முழங்க, மேளதாளங் களோடு, நடனமாடியபடி, லட்சக்கணக்கான மக்களுக்கு தரிசனம் தந்த படி, ஆனித் திருமஞ்சன மகா தரிசன காட்சி
நடைபெறும்.
நடராஜர் இருக்கும் தலங்களில் அபிஷேகம்
ஆனித் திருமஞ்சன விழாவை தொடங்கி வைத்தவர் பதஞ்சலி முனிவர். ஆனியில் உத்தர நட்சத்திரத்தில் நடைபெறும் உற்சவம் இது. அன்றைய தினம் சிதம்பரம் ஆலயத்தில் சந்திரமௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் சிறப்பாக நடைபெறும் கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமி அம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்கள் கொண்டு ஆராதனை செய்யப்படும். சிவாலயங்களில் எங்கெல்லாம் நடராஜர் திருவுருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறதோ அங்கெல்லாம் ஆனித்திருமஞ்சனம் விசேஷமாகக் கொண்டாடப்படும். திருவண்ணாமலை, உத்தர கோசமங்கை, திருவெண்காடு எனப் பலத் தலங்களில் இந்த திருமஞ்சன வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
சிவபெருமானின் நடராஜ மூர்த்தம்
இறைவன் உருவமாக இருக்கின்றான். அருவமாக இருக்கின்றான். அருவுருவமாக இருக்கின்றான். பிரபஞ்சம் முழுவதும் பரந்து இருக்கின்றான். பிரபஞ்சத்தை இயக்குபவனாக இருக்கின்றான். சைவத்தில் சிவமூர்த்தங்கள் பல உண்டு. அதில் அற்புதமான உருவம் தான் நடராஜரின் திருவுருவம். சிதம்பரத்தில் மிகப்பெரிய விசேஷம், நடராஜரே இங்கே மூலமூர்த்தியாக இருக்கின்றார். எந்த இடத்திலும் மூலமூர்த்தி உற்சவ மூர்த்தியாக வெளியே வர மாட்டார். ஆனால் சிதம்பரம் இதிலும் விசேஷம். இங்கே நடராஜர் தன்னுடைய ஆஸ்தானத்தை விட்டு இரண்டு முறை வெளியே வந்து, திருமஞ்சனம் கண்டருளி, மறுபடியும் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டு சித்சபைக்கு எழுந்தருளும் காட்சி சிதம்பரத்திற்கே உரிய மாட்சி. இது வேறு எந்தத் திருத்தலத்திலும் இல்லாதது. அதுவும் பஞ்சபூதத் தலங்களில் சைவர்களுக்கு தலைமை ஆலயம் என்றும் கோயில் என்ற பொதுப் பெயரில் வழங்கப்படும் திருத்தலத்தில், சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜமூர்த்தி காட்சி தருவதும் திருமஞ்சனம் கண்டருள்வதும் அற்புதமான அனுபவம்.
இத்தனை அழகா நடராஜப் பெருமானுக்கு?
திருநாவுக்கரசர் நடராஜப் பெருமானின் திருமுகத்தைப் பார்க்கின்றார்.. அடடா எத்தனை அழகு.எத்தனை அழகு. வளைத்த புருவம், என் மனதை வளைக்கிறதே! திருவாயைப் பார்க்கின்றார். சிவந்த அதரம் அப்படியே புன் முறுவலோடு விரிகிறது. கொவ்வைச் செவ்வாய். மேனியோ பவளம் போன்ற சிவப்பு. அதிலும் கிண்கிணி விரித்தது போல அந்த சிரிப்பு ஒரு கோடு போல் விரிகிறது. இதனைக் குமிழ் சிரிப்பு என்று கொண்டாடுகிறார். திரு உடம்பில் பால் போல வெண்மையான திருநீறு பூசியிருக்கிறான். சிவந்த மேனியில் வெண்ணீறு அணிந்து அழகாக காட்சி தருகின்றான். அப்படியே மேலே பார்க்கிறார். பனித்த சடை. பனித்த என்றால் ஈரம் என்று பொருள். அவருடைய நெஞ்சில் ஈரம் இருப்பதைப் போலவே அவனுடைய சடையிலும் ஈரம் இருக்கிறது. காரணம் அங்கே கங்கை
அல்லவா அமர்ந்திருக்கிறாள்.
நடராஜனின் தரிசனம்
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே! பொருள்:வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.
இத்தலத்திற்குத் தான் எத்தனை பெயர்கள்?
மன்று, அமலம், சத்து, உம்பர், இரண்மயகோசம், மகத், தனி, புண்டரிகம், குகை, வண்கனம், சுத்தம், பரம், அற்புதம், மெய்ப்பதம், கழுனாவழி, ஞானசுகோதயம், சிதம்பரம், முத்தி, பரப்பிரம்மம், சபை, சத்தி, சிவாலயம், பொது, சிற்றம் பலம், புலியூர், பெரும்பற்றப்புலியூர் முதலிய பல பெயர்கள் உள்ளன. நடராஜ மூர்த்திக்குத்தான் எத்தனை விழாக்கள்? அதில் முக்கியமான விழா ஆனித் திருமஞ்சனம். மஞ்சனம் என்றல் நீராட்டம். “மங்கல மஞ்சன மரபி னாடியே” என்பது கம்பராமாயணம். சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால், அவனுக்கு குளிரக்குளிர, நீராட்டம் நடப்பதை நம் கண்களால் காணும் பொழுது, நம்முடைய உள்ளம் குளிர்கிறது. எண்ணங்கள் நிறைகிறது. அதன்பிறகு நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கிறது. அதனால் தானே உலகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், தில்லைத் திருத்தலத்தில் ஆனித்திருமஞ்சன நன்னாளிலே கூடுகிறார்கள்.
நடராஜரின் தேர் ஆடும் நம் மனமும் சேர்ந்து ஆடும்
முத்து தாண்டவர் அனுபவித்து
பாடுவதைப் பாருங்கள்.
ஆர நவமணி மாலைகளாட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாடச்
சிதம்பரத்தேர் ஆட
பேரணி வேதியர் தில்லைமூவாயிரம்
பேர்களும்
பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனகசபை தனிலே
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண
கண்ணாயிரம் வேண்டாமோ.
முதலில் பஞ்ச மூர்த்திகளின் தேர் ரதவீதிகளில் கொடியோடு அசைந்து வரும். அதற்குப் பிறகு அம்மனின் தேர். அதற்குப் பிறகு ஆனந்த நடராஜமூர்த்தியின் அற்புதத் தேர். அந்தத் தேர் இழுக்கும்போது அதில் கட்டப்பட்டு இருக்கக்கூடிய கொடிகளும் வண்ணச் சிலைகளும் அசைந்து அசைந்து மயக்கும். அந்த தாள வாத்தியம் நம்முடைய மனதை கொள்ளை கொள்ளும். ஆடத் தெரியாதவர்களின் கால்கள் கூட நடனம் ஆடத் தொடங்கும்.
தெருவடைத்தான் திருவிழா
பொதுவாக, ஒரு கோயிலில் இருந்து ஒரு சப்பரம் எடுத்துச் சென்று, ஊர் மக்கள் அனைவரும் கூடி கொண்டாடும் ஒரு நிகழ்வு இது. இதில் சப்பரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதி உலா வருவார்கள். இந்த விழா ஆனிப் பெருவிழாவில் மிகச் சிறப்பாக நடைபெறும் அதுவும் சென்ற ஆண்டு காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட மூன்று லட்சம் ருத்ராட்சங்களை கொண்டு 48 மணி நேரமாக சிவலிங்க வடிவில் ருத்ராட்ச சப்பரம் அமைக்கப்பட்டது. வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வாத்தியங்கள் முழங்க எழுந்தருளி பந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கிழக்கு ரத வீதியில் இருந்து புறப்படும் ஊர்வலம் தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி உள்ளிட்ட வீதிகளில் வலம் வரும். விடிய விடிய சுவாமி தரிசனம் செய்வர். ஐந்தாம் நாளன்று ‘தெரு வடைத்தான்’ எனப்படும் வாகனத்தைச் சுவாமி வந்தடையும் வரை நாகசுரமும் பின்பு, நட்டும் முட்டும் ஒலிக்கும்; ஐந்தாம் நாள் ஐந்து தாளத்தில் மல்லாரி
வாசிக்கப்படும்.
சுவாமி புறப்பாடும் இசையும்
இசை என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் மல்லாரி வாசிப்பது என்பது அந்தந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டுவது. சுவாமிக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கப் போகிறோம் என்றால் அங்கே தீர்த்த மல்லாரி வாசிப்பார்கள். சுவாமிக்கு தளிகை கண்டருளப் பண்ண வேண்டும் என்றால் தளிகை மல்லாரி வாசிப்பார்கள். சுவாமி தேருக்கு எழுந்தருளப் போகிறார் என்றால் அதற்கென்றே பிரத்யேகமான தேர் மல்லாரி வாசிப்பார்கள். ஆலயவழிபாட்டில் இசை என்னும் நூலில் இன்னும் சில தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சிதம்பரத்தில் ஸ்வாமி தேருக்கு எழுந்தருளும் போது தேர் மல்லாரி; ஆயிரக்கால் மண்டபத்தைச் சுவாமி அடைந்ததும் ஆகிரி, நீலாம்பரி ராகங்களிலுள்ள எச்சரிக்கைப் பாடல்கள்; அவற்றைத் தொடர்ந்து ஏதேனுமொரு பதம்; பதினோராம் திருநாளன்று உசேனி ராகம், ஆகியவை இடம் பெற்றிருத்தல் வேண்டுமென்ற இசை மரபு, தில்லைக் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அம்பலத்தான்
அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே.
– என்பது வள்ளலார் பாட்டு.
ஆனித் திருமஞ்சனமும் தரிசனமும் காண மருதூரில் இருந்து சிதம்பரத்திற்கு வள்ளல் பெருமானார் வருவாராம். அம்பலத்தான் என்கின்ற திருநாமம் அவருக்கு மிகவும் பிடிக்கும்.அம்பலம் என்ற சொல்லிற்கு திறந்தவெளி சபை என்று பொருளாகும். அம்பலத்தில் சிவபெருமான் ஆடுவதால் அம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். தில்லையாகிய சிதம்பரத்தில் ஆடுவதால் தில்லையம்பலத்தான் என்றும். சிதம்பரமானது பொன்னம்பலமாகியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் அம்பலத்தாடுபவன், அம்பலத்தரசன், அம்பல வாணன் என்றும் அழைக்கப்படுகிறார்.
திருஉத்தரகோசமங்கை
தில்லையில் நடனமாடும் முன்பு இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோச மங்கை எனும் தலத்தில் நடராசர் தனிமையில் நடனமாடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தை ஆதி சிதம்பரம் என்றும், இத்தல இறைவன் ஆதிசிதம்பரேசுவரர் என்றும் அழைக்கின்றனர்.இங்குள்ள நடராசர் ஐந்தரை அடி உயரம் – முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே காட்சியளிக்கிறார். மார்கழித் திருவாதிரை அன்று மட்டும் சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் மீண்டும் சந்தனக்காப்பு சாத்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார். அம்பலவாணர் அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தை தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது
நடராஜர் வழிபாட்டின் பலன்
நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே, நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் பார்த்து வழிபடுதல் வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியைப் பெற முடியும். அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தைக் குறிக்கும். அந்த பாகத்தைப் பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.ஆனித் திருமஞ்சனம், மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்தது. இந்தப் புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்குச் சென்று இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும். சிதம்பரம், உத்தர கோசமங்கை உள்பட சில தலங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் புகழ் வாய்ந்தது. இந்தத் தலங்களில் அன்றைய தினம் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்து நடராஜரை வழிபடுவார்கள். ஆச்சரியங்கள் நிறைந்த திருவண்ணாமலையிலும் ஆனித் திருமஞ்சனம் மிக விமரிசையாக நடைபெறும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள். சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் அவர்களுக்கு உரிய இடத்தில் திருமணம் நடை பெறும். மொத்தத்தில் சிவ-சக்தி இருவரது பேரருளும் நமக்குக் கிடைக்கும். பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிர சபை, குற்றாலம் சித்திர சபை இவற்றில் இந்த அபிஷேகங்களைத் தரிசிப்பது
மிகவும் சிறப்பு.
எஸ்.கோகுலாச்சாரி