Tuesday, May 13, 2025
Home செய்திகள்குற்றம் ஜவுளிக்கடை உரிமையாளர் தலைதுண்டித்து கொலை சதி திட்டம் தீட்டியதாக இளம்பெண் அதிரடி கைது

ஜவுளிக்கடை உரிமையாளர் தலைதுண்டித்து கொலை சதி திட்டம் தீட்டியதாக இளம்பெண் அதிரடி கைது

by Karthik Yash

தென்காசி: தென்காசியில் பழிக்குப்பழியாக நடந்த ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று திடீர் திருப்பமாக சதி திட்டம் தீட்டியாக இளம்பெண்ணைபோலீசார் கைது செய்தனர். தென்காசி அருகே கீழப்புலியூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் குத்தாலிங்கம். இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடந்த 16ம் தேதி குத்தாலிங்கம் அவரது மனைவி தனமும் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று குத்தாலிங்கத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. பின்னர் தலையை துண்டாக எடுத்துச் சென்று குற்றாலம் அருகிலுள்ள காசிமேஜர்புரம் அம்மன் கோவில் அருகில் வைத்து விட்டு சென்று விட்டனர்.

இந்த கொலை தொடர்பாக காசிமேஜர்புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (எ) ரமேஷ் (25), அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகரசுதன் (24), செண்பகம் (40), குடியிருப்பை சேர்ந்த மணி (32) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்தாண்டு நவ. 17ம் தேதி காசிமேஜர்புரத்தில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பட்டுராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஆனந்த் என்பவரின் சகோதரர்தான் தற்போது கொலை செய்யப்பட்ட குத்தாலிங்கம். பட்டுராஜன் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் அவரது மனைவியின் சகோதரரான ராமகிருஷ்ணன் (எ) ரமேஷ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து குத்தாலிங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து நான்கு பேரையும் தென்காசி குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கடந்த நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்ட பட்டுராஜாவின் மனைவி மகாதேவி (27) என்பவரை போலீசார் வழக்கில் சேர்த்தனர். இவர் குத்தாலிங்கம் கொலையில் சதியில் ஈடுபட்டதாக நேற்று காலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாலையில் அவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மகாதேவிக்கு 1 வயதில் மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* கைதான ரவுடிக்கு கால்முறிவு கிருஷ்ணசாமி கார் மீது வெடிகுண்டு வீசியவர்
குத்தாலிங்கம் கொலை வழக்கு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட செண்பகம் போலீஸ் விசாரணையின் போது தப்பிக்க முயன்று உள்ளார். அப்போது போலீசார் விரட்டிச் சென்றுள்ளனர். இதில் கீழே விழுந்ததில் செண்பகத்திற்கு கால் முறிந்தது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘செண்பகம் காசிமேஜர்புரத்தில் ஆட்டோ ஓட்டுவது, வெள்ளை அடிக்க செல்வது மற்றும் கூலி வேலைகளுக்கும் சென்று வந்துள்ளார். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி ஆகும்.

அங்கிருந்தபோது இவருக்கு ரவுடி மதன் கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. அப்போதே இவர் பல குற்ற செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசிய வழக்கிலும் செண்பகத்திற்கு தொடர்பு உண்டு. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குத்தாலிங்கம் கொலையில் செண்பகம் கொலையாளிகளுடன் சேர்ந்து வெட்டுங்கள், தலையை துண்டாக எடுங்கள் என்று கூறியதுடன் தலையை தனியாக எடுத்து காசிமேஜர்புரத்திற்கு கொண்டு வந்து வைத்துள்ளார்’ என்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi