திருவனந்தபுரம்: உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது பிரபல மலையாள டிவி நடிகை பிரியா மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையை அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் காப்பாற்றினர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரியா (35). டாக்டரான இவர், திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தார். சில மலையாள டிவி தொடர்களிலும் நடித்து வந்தார். திருமணமாகி கணவர் உள்ளார்.
இந்நிலையில் பிரியா கர்ப்பமானார். 8 மாத கர்ப்பமாக இருந்த பிரியா சினிமாவிலும், மருத்துவமனையிலும் தொடர்ந்து பணிபுரிந்து வந்தார். நேற்று சினிமா ஷூட்டிங் இல்லாத காரணத்தால் வழக்கமான பரிசோதனைக்காக திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவமனைக்கு சென்றார். சிறிது நேரத்தில் திடீரென படபடப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் நெஞ்சை பிடித்து கொண்டு மயக்கமடைந்தார். உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பிரியாவின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியே எடுத்தனர். அந்த குழந்தை நலமாக உள்ளது. தொடர்ந்து பிரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். நடிகை உயிரிழந்த சம்பவம் சின்னத்திரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.