இஸ்லாமாபாத்: தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். காஷ்மீர் தாக்குதலுக்கு தொடர்பில்லை என்றால் ஏன் கண்டிக்கவில்லை? என்று பாகிஸ்தான் பிரதமருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு உலக நாட்டு தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா தனது எக்ஸ் தள பக்கத்தில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்த பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? உங்கள் படைகள் ஏன் திடீரென்று அதிக எச்சரிக்கையுடன் உள்ளன? ஆழமாக பார்த்தால், உங்களுக்கு உண்மை தெரியும். நீங்கள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. இது அவமானம்’ என்று பதிவிட்டுள்ளார். டேனிஷ் கனேரியாவின் இந்த கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.