தென்காசி: தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை கைது செய்து குற்றாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம் (32 வயது). இவர் கீழப்புலியூர் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று(ஏப்.16) மதியம் குத்தாலிங்கம் தனது மனைவியுடன் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த 4 பேர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
மேலும் தலையை துண்டித்து அவரது சொந்த ஊரான காசிமேஜர்புரத்தில் கொண்டு வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குத்தாலிங்கத்தின் சகோதரர் ஒரு கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக குத்தாலிங்கம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று(ஏப்.16) இரவில் மாவட்ட கண்கானிப்பாளர் அரவிந்த் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். தற்போது 6 பேரை பிடித்து விசாரணை செய்ததில் 4 பேர் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்டது. குற்றவாளிகளான காசிமேஜர்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ், ஹரிகரன், செண்பகம் மற்றும் புறா மணி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.