கடையம்: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டிக்கு எப்போது சாட்டையடி என தென்காசியை கலக்கும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை கோவையில் தனக்குத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். மேலும் காலில் செருப்பு அணிய மாட்டேன் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டி ஆகியவற்றை குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படத்துடன் கூடிய போஸ்டர்கள் தென்காசி மாவட்டத்தை கலக்கி வருகின்றன.
தென்காசி மாவட்டம் கடையம் வடக்கு ஒன்றிய சுற்று வட்டார பகுதியில் திமுக சார்பில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன் என குறிப்பிட்டு பாஜ தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்ளும் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், GST வரி உயர்வு போன்றவைகளுக்கு எப்போது சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறார்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டி ஆகியவற்றை குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


