கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் கறுப்புத் தாளை கெமிக்கலில் நனைத்தால் பணமாகும் என மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் செவிலியராக மாதம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார்.
தேன்கனிக்கோட்டையில் அருகே ஒரு கிராமத்திலுள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்று கோவில் பூசாரியாக ரவியிடம் குடும்ப கஷ்ட்டம் தீர சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பூசாரி ரவி, உங்களுக்கு உதவி செய்ய என்னிடம் பணம் இல்லை. ஆனால் ஒரு வழி இருக்கிறது. அந்த வழியை பின்பற்றினால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என மாதம்மாளிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதே சமயம் அந்த பகுதியை சேர்ந்த பிரபு என்பவர், பூசாரியிடம் கருப்பு பணம் உள்ளதாகவும், ரூ.10,000 கொடுத்தால் ரூ.20,000 திருப்பி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கறுப்புத் தாள்களை கெமிக்கலில் நனைத்து எடுத்தால் உண்மையான பணம் போன்று இருக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய மாதம்மாள் ரூ.40,000 பணத்தை பிரபுவிடம் கொடுத்துள்ளார்.
பிறகு ரூ.50,000 மதிப்புள்ள இரு கறுப்புத் தாள் கட்டுகளை மாதம்மாளிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து மாதம்மாள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்று தாள்களை கெமிக்கலில் நினைத்தபோது, அது உண்மையான பணம் போன்று வரவில்லை என்பதை அறிந்தவர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் பூசாரிக்கு உடந்தையாக இருந்த முனிகிருஷ்ணன், நஞ்சுண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.