தண்டையார்பேட்டை: சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்கு பாலாலய திருப்பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கிவைத்தார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். தர் உள்பட பலர் இருந்தனர்.இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; இன்று மட்டும் 8 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோயிலில் சுமார் 1 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் 17 திருப்பணிகள் நடைபெற உள்ளது. அதனை இன்று தொடங்கி வைத்துள்ளோம். இந்த கோயிலில் வருகின்ற 28ம் தேதி வெள்ளி தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதுவரை 2,956 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. வருகின்ற ஜூன் 5ம் தேதி 3 ஆயிரமாவது குடமுழுக்கு நாகை மாவட்டம் திருப்புகழூரில் உள்ள திருக்கோயில் நடைபெற உள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 560 ஏக்கர் அளவிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. நில அளவு கற்கள் இரண்டு லட்சத்தை நிறைவு செய்ய இருக்கிறோம். நீங்களும் உதயநிதியும் மெல்ல மெல்ல சனாதானத்தை ஏற்றுக்கொண்டதால்தான் கோயில்களில் அன்னதான உணவுகளை வழங்கி வருகிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளாரே?
அமைச்சர்; கைப்பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம் என்று தமிழிசை பேசி வருகிறார். பழுத்த மரத்தில்தான் கல்லடிப்படும் என்பதுபோல் துணை முதல்வர் இன்று புகழ் உச்சியில் இருக்கிறார். தளபதிக்கு தோள் கொடுத்து சுமக்க தயாராக இருக்கிறார். அதனால்தான் இது போன்ற விமர்சனங்கள் வருகிறது. இறைப்பசியோடு வருபவர்களுக்கு வயிற்று பசியும் போக்கும் ஆட்சி தான் இன்று நடந்துவருகிறது.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளாரோ? அமைச்சர்; அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் கடந்த 3 ஆண்டுகளாகத்ததான் சம்பந்தம் உள்ளது. அதுக்கு முன்பாக எந்த சம்பந்தமும் தமிழ்நாட்டோடு கிடையாது. தமிழ் மொழியே இங்கு வந்துதான் கற்றுக்கொள்கிறேன் எனக் கூறுகிறார். அவர் தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. இவ்வாறு கூறினார்.