Wednesday, July 9, 2025
Home செய்திகள்Banner News கோயில் காவலாளி போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

கோயில் காவலாளி போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

by Karthik Yash

* தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்
* இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும், எங்கும், யாராலும் நடந்துவிடக் கூடாது

சென்னை: கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும், எங்கும், யாராலும் நடந்துவிடக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவகாமி (73). இவரது மகள் நிகிதா (48). இருவரும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட சென்றனர். கோயிலுக்கு வந்ததும் காரை கோயில் செக்யூரிட்டி அஜித்குமாரிடம் பார்க்கிங்கில் நிறுத்தும்படி கூறியுள்ளார்.

அவர் தனக்கு கார் ஓட்ட தெரியாது என்று கூறியவர் தனது நண்பரை வரவழைத்து காரை நிறுத்தியுள்ளார். பின்னர் சாமி தரிசனம் முடிந்து திரும்பியவர், காரில் உள்ள பையில் 10 சவரன் நகை இருந்ததை காணவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருப்புவனம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் சிறப்பு தனிப்படை போலீசார் 6 பேர் சென்று காவலாளி அஜித்குமார், அவரது நண்பர் மற்றும் தம்பி ஆகியோரை அழைத்து விசாரித்துள்ளனர். பின்னர், அவர்களை அனுப்பிவிட்டு அஜித்குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது போலீசார் கோயிலுக்கு பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து அடித்துள்ளனர். அதில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அஜித்குமார் உயிரிழந்துள்ளார். போலீசார் அடித்ததில்தான் அஜித்குமார் இறந்தார் என்று தெரியவந்ததால், அவரை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 5 காவலர்களை கைது செய்தனர். வாகனம் ஓட்டியவர் மீது தவறு இல்லாததால் அவரை சஸ்பெண்ட் மட்டும் செய்தனர். இதற்கிடையே சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆசீஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். டிஎஸ்பி சண்முகசுந்தரம், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28.6.2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்கு காரணம் என்பதை அறிந்ததும் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லி தப்பிக்க முடியாத செயல்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாக சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது. நேற்று சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணை கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்துக்கப்பட்டு வருகிறது.

துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமாரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடந்த துயரச் சம்பவத்திற்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையை தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும். காவல்துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். இதுபோன்ற மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை.

திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்திடும் என நம்பி காவல்துறையை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் காவல்துறை எப்போதும் செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு தானாகவே முன்வந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதற்கு, அஜித்குமாரின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

* காவல்துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்
* தங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்திடும் என நம்பி காவல்துறையை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றிடும் வகையில் காவல்துறை எப்போதும் செயல்பட வேண்டும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi