முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளத்தில் நல்லமாணிக்கர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு முத்துப்பேட்டை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு நல்லமாணிக்கர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் குன்னலூர் வசந்த மண்டபத்தில் இருந்து புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று பத்ரகாளி அம்மனுக்கு காவடி அபிஷேகம் நடந்தது.
இன்று (29ம் தேதி) அதிகாலை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட கிடாக்கள் பலியிட்டு பூஜை செய்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இதைதொடர்ந்து பக்தர்கள் பலாப்பழங்களை வாங்கி இரண்டாக வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் மாதவன், பரமேஸ்வரன், திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன், அறங்காவலர்கள் சுந்தர், செந்தில்நாதன், ராம்கி, ராஜா, பக்கிரிசாமி, ராசமாணிக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் பங்கேற்றனர்.