சென்னை: பர்கூர் பந்தீஸ்வரர் கோயில் மகா பெரிய குண்டம் விழாவில், முதல் மரியாதை வழங்க கோரி தேவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அதில், கோயில் வழக்கப்படி சுவாமி ஊர்வலத்தின்பொது எனது குடும்பத்தினருக்குதான் முதல் மரியாதை வழங்கப்படும். அந்த வகையில் எனக்கு முதல் மரியாதை வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிஆனந்த் வெங்கடேஷ், பல கோயில் விழாக்களில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமே முதல் மரியாதை தான். கோயில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளை விட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். இது, விழாக்கள் நடத்தும் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது. இதுபோன்ற மரபுகள், சமத்துவத்துக்கு எதிரானது. கடவுள் முன் அனைவரும் சமம். கோயில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து வழக்கை முடித்து வைத்தார்.