சென்னை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் இல்லாமலும், விதிகளை பின்பற்றாமலும் உண்டியல்களை திறக்க கூடாது என்று உத்தரவிடக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், உண்டியல் எண்ணிக்கையை கண்காணிக்க மாவட்டம் தோறும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அல்லது ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்களை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் வழக்குகள் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளுக்கு பதிலளித்து, அறநிலையத் துறை ஆணையர் முரளிதரன் தாக்கல் செய்த பதில் மனுவில், 5000 ரூபாய்க்கு மேல் வசூலாகும் கோயில் உண்டியல்களை மாதந்தோறும் திறக்க வேண்டும். இரு வாரங்களுக்கு முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படுகிறது.
விதிகளின்படி, கோயில் அறங்காவலர் குழு தலைவர், செயல் அலுவலர், தக்கார்கள், பொது மக்கள், வங்கி அதிகாரிகள் முன்பு உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதிலுள்ள பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. முக்கிய கோயில்களில் உண்டியல் திறப்பு மற்றும் எண்ணிக்கை கோயில் யுடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுவை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2024 ஜனவரி 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.