திருமலை: தெலுங்கானா ஆலை வெடிவிபத்து தொடர்பாக ஆலை நிர்வாகத்திடம் பேசி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம், செங்காரெட்டி மாவட்டம், பட்டன்சேரு தொழிற்பேட்டையில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் ஷிப்டில் ஏராளமான தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென தொழிற்சாலையில் உள்ள ஒரு ராட்சத பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. பணியில் இருந்த ஏராளமான தொழிலாளர்கள் சிலர் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோரா விபத்தில் இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்துக்கு நேரில் வருகை தந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த தொழிலாளர்களை சந்தித்த முதல்வர், அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்; உடனடி நிவாரணமாக, இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இது உடனடி நிவாரணம் மட்டுமே என்றும் இழப்பீடு அல்ல என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஆலை நிர்வாகத்திடம் பேசி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும். ரூ.1 கோடி வழங்குவதற்காக அரசு மற்றும் நிறுவனம் தரப்பில் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன்.
தீவிர காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சைக்கு பின் குணமடைந்து பணிக்கு திரும்பக்கூடிய அளவுக்கு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் கிடைக்கும் என்று கூறினார்.