திருமலை: சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோக்களை வெளியிட்ட நர்ஸ் உலக்கையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டம் பொல்லம்பள்ளே கிராமத்தில் உள்ள ராஜீவ் நகரை சேர்ந்தவர் அஜ்மிராசிந்து(22). இவர் மஹ்பூபாபாத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவரது அண்ணன் ஹரிலால்(25). அஜ்மிராசிந்து சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து பல்வேறு பாடல்களுக்கு நடனமாடியும், சினிமா வசனம் பேசி ‘ரீல்ஸ்’ வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.
இவரது வலைதள கணக்கை பலர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் பல லைக்குகள் கிடைத்துள்ளது. அவரது அண்ணன் ஹரிலால், வீடியோக்களை பதிவு செய்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தி வந்தார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லையாம். இதுதொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஹரிலால் வீட்டில் இருந்த உலக்கையால் அஜ்மிராசிந்துவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அஜ்மிராசிந்து பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிலாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.