ஐதராபாத்: தெலங்கானாவில் சுரங்கம் இடிந்த விபத்தில் 8 பேர் சிக்கிய நிலையில், அவர்களில் 4 பேர் எங்கே இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்துக்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இப்பணியில் 42 கி.மீ. தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கம் அமைக்கப்படுகிறது. கடந்த பிப்.22-ம் தேதி திடீரென மேற்கூரை இடிந்து 3 மீட்டர் வரை சுரங்கத்தினுள் மண் விழுந்தது. இதில், 8 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
அங்கு மீட்புப் பணிகள் ஒரு வார காலமாக நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் அமைச்சர்கள் உத்தம்குமார் ரெட்டி, ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணா ராவ், ‘‘கடந்த இரண்டு நாட்களில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 4 பேர் எங்கே இருக்கிறார்கள் என்பது ரேடார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அவர்கள் மீட்கப்படுவார்கள். மற்ற நான்கு பேர் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தின் அடியில் சிக்கியதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு” என்று கூறினார்.